சிறு,குறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.1509 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வது இன்றியமையாதது. இத்தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு மேற்கொள்ளும். மேலும், பெரிய தொழிற்சாலைகள் உள்பட அனைத்து தொழில் நிறுவனங்களையும் இணைத்து, ஒருங்கிணைந்த தரவுதளம் ஒன்றை ஏற்படுத்த இந்த முயற்சி வழிகோலும். இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள ரூ.5 கோடி வழங்கப்படும்.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழில் வளர்காப்பகங்கள் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. அதன்படி, காலநிலை தொழில்நுட்பம், ஊரகத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற விழையும் தொழில் வளர்காப்பகங்களை ஆதரிக்கும் நோக்கில், உயர்நுட்ப மையங்களை அமைக்க புத்தொழில் தமிழ்நாடு இயக்கம் உதவும். இதன்மூலம், தொழில் வளர்காப்பகங்கள் நிதி திரட்டிட உதவுவதுடன், 40 சதவீத மானியமும் வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் தொழில் வளர்காப்பகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த புத்தொழில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்படும்.

அதன்படி, இந்தாண்டு முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.144 கோடி அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டச் செயல்பாட்டில் இது ஒரு புதிய மைல்கல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் பணம் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய ‘மின்னணு வர்த்தக வரவு தள்ளுபடி’ தளத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைவதை கட்டாயமாக்கியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். அதன்படி, இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,509 கோடி  ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: