14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் 2030க்குள் செயல்படுத்தப்படும்: ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 2030ம் ஆண்டுக்குள் ரூ.77,000 கோடியில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை நிறைவு செய்திட பசுமை ஆற்றல் வளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, 2023ம் ஆண்டிற்குள் 33,000 மெகாவாட் அளவிற்கு மாநிலத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தி மாநிலத்தில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநில மின் உற்பத்தியில் தற்போது 20.88 சதவீதமாக இருக்கும் பசுமை ஆற்றலின் பங்களிப்பை 2030ம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் மொத்த மின்  உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கும். மேலும் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் செயல்திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படும். 2030ம் ஆண்டுக்குள், ரூ.77,000 கோடியில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நீரேற்று மின் திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும். மேலும், தற்போது நடந்து வரும் 4100 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர் இணைப்புகளுக்கும் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதியுடன் திறன்மிகு மின் அளவிகள் நிறுவப்படும். அடிப்படை சீர்திருத்தங்களின் விளைவாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது. இதனால், இக்கழகத்தின் இழப்பு 2021-22ம் ஆண்டில் ரூ.11,955 கோடியிலிருந்து நடப்பாண்டில் ரூ.7825 கோடியாக குறைய வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14063 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: