தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: தொழில் முனைவோர்களாக மாறும் தூய்மை பணியாளர்கள்

தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும். முதற்கட்டமாக, பணியின்போது இறக்க நேரிட்ட இப்பணியாளர்களின் குடும்பங்களுக்கும், தற்போது ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து சென்னயில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். திறன் பயிற்சியுடன் இயந்திரங்களையும், பாதுகாப்புக் கருவிகளையும் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

* சுற்றுலாவுக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டின் ‘சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ், பல்வேறு சுற்றுலாத்தலங்களில்  கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நடப்பாண்டில் ரூ.75 கோடி மதிப்பிலுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிச்சாவரம், பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், அனைத்துத் துறையினருடன் கலந்தாலோசித்து, சுற்றுலா கொள்கை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது  விரைவில் வெளியிடப்படும்.

* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ.2,783 கோடியில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்வு

மின்னல் வேகத்தில் மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு, ரூ.2,877 கோடி செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடந்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0- தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளை ‘திறன்மிகு மையங்களாக’ மாற்றும் திட்டம் வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இக்கல்வி நிறுவனங்களில், கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாட திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள். இத்திட்டத்தில், 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘திறன்மிகு மையங்களாக’ தரம் உயர்த்தப்படும். தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், ரூ.120 கோடியில் சென்னை அம்பத்தூரில் ‘தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்’ அமைக்கப்படும்.

* நாகூர் தர்கா சீரமைப்பு

பள்ளிவாசல்களையும் தர்காக்களையும் பழுதுபார்க்க, சீரமைக்க வழங்கப்படும் ஆண்டு மானியம் நடப்பு ஆண்டில் ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாகூர் தர்காவை சீரமைக்க இந்த ஆண்டு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், ரூ.52 கோடி வக்ப் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக, வக்ப் வாரிய சொத்துக்களின் தரவுத்தளம் உருவாக்கப்படும்.

* இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி தர தொழில் நிறுவனங்கள் ஊக்குவிப்பு

‘நான் முதல்வன்’ என்ற தொலைநோக்கு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கினார். வேலை வாய்ப்புகளை மேம்படுத்த பயிற்சி திட்டங்களை உள்ளடக்கி கல்விப் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தமாக 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 12,582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திறன் பயிற்சி கட்டமைப்பை பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சி கூடங்களாகப் பயன்படுத்தப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 3வது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.80 கோடியில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.

Related Stories: