தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு

திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர்மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில், ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டிடங்களும் ரூ.147 கோடி செலவில் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முதல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டையில் 1964ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் தற்போது 100 இளங்கலை பட்டதாரிகளும், 60 முதுகலை பட்டதாரிகளும் பயின்று வருகின்றனர். நாள்தோறும் ஏறத்தாழ 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வரும் ஆண்டிலும் சர்வதேச புத்தகக் கண்காட்சி

தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: அறிவைப் பரவலாக்கி கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சமூக நீதித் தத்துவம் முழுமை அடைகிறது. அந்த அடிப்படையில் தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் ரூ.10 கோடி நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூனில் திறப்பு

தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள். இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், இந்த நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான நூலகச் சூழல், போட்டி தேர்வு மாணவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய சிறப்பு பிரிவு, பார்வைத் திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்குகள், தென்தமிழகத்தின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் கலை அரங்கம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்புகள், பேச்சுகள் இடம் பெறும் வகையில் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மாபெரும் நூலகத்தில் இடம் பெற்றிருக்கும். முதற்கட்டமாக, இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். தென்தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழப்போகும் இந்நூலகம், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க நிகழ்வாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என்ற பெயரைத் தாங்கி, வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: