அண்ணாநகர்: செல்போனில் வந்த லிங்க்கை தொட்டதும் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதால் தனியார் கம்பெனி ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம்(40). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஒரு நம்பரில் இருந்து பேசிய நபர், ‘’குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் பேசுகிறேன்’’ என்று சொல்லி உங்களுக்கு வந்த லிங்க்கை தொட்டு பாருங்கள் உடனடியாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரகுராம் அந்த லிங்க்கை தொட்டுள்ளார். இதன்பிறகு சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வந்ததும் ரகுராம் கடும் அதிர்ச்சி அடைந்தார்.