அகர்வால்ஸ் மருத்துவமனையின் 13வது ரெட்டிகான் கருத்தரங்கு: தயாநிதி மாறன் எம்.பி. தொடங்கி வைத்தார்

சென்னை: அகர்வால்ஸ் மருத்துவமனை சார்பில் 13வது ரெட்டிகான் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.  டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா பவுண்டேஷனால் விழித்திரை அறுவைசிகிச்சை மீது நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கான, ரெட்டிகான் 13வது பதிப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தியா, வெளிநாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான கண் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

மத்தியச் சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இக்கருத்தரங்கு நிகழ்வில் பாரம்பரியமான குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார். இத்தொடக்க நிகழ்வின் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், இதன் செயலாக்க இயக்குனர் மற்றும் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர். அஸ்வின் அகர்வால் பங்கேற்றனர்.

அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் கூறியதாவது: ரெட்டிகான் கருத்தரங்கின் 13வது பதிப்பு நிகழ்வு மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000 கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.  இந்தியாவில் விழித்திரை நோய்கள் பற்றி மக்கள் மத்தியில் குறைவான விழிப்புணர்வே இருக்கிறது. விழித்திரை அறுவைசிகிச்சை தளத்தை இது மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது.  விழித்திரை நோய்கள் தொடர்பாக நிகழ்ந்திருக்கும் அதிவிரைவான மருத்துவ முன்னேற்றங்களினால், அவைகளின் மேலாண்மை மற்றும் சிகிச்சை அதிக பயனளிப்பதாகவும், திறன்மிக்கதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாறியிருக்கிறது. விழிப்படிக  விழித்திரை அறுவைசிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துவதற்கு விழித்திரை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதே ரெட்டிகான் கருத்தரங்கின் நோக்கமாகும்.

விழித்திரை நோய்களே நிகழாமல் முன்தடுக்கக்கூடிய பார்வை திறனிழப்பின் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உரிய நேரத்திற்குள் நோயறிதல் செய்யப்படுமானால், விழித்திரை நோய்களுக்கு திறன்மிக்க சிகிச்சையின் மூலம் குணம் பெற முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக கண்புரை போன்ற நோய்களுடன் ஒப்பிடுகையில், பார்வை திறனிழப்பு தடுப்பிற்கான செயல்திட்டங்களில் விழித்திரை நோய்களுக்கு குறைவான முன்னுரிமையே கிடைக்கிறது. பாதிப்பு அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் சிகிச்சையை தேடிப்பெறுவது குறித்து அறிவும், அக்கறையின்மை ஆகியவற்றின் காரணமாக பார்வைத்திறனால் அவதிப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. 40 ஆண்டுகள் வயதுக்கு மேற்பட்ட நபர்கள், அவர்களது பார்வைத்திறனை பரிசோதிக்க எளிய பரிசோதனைகளை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்; ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணில் மங்கலான பார்வை இருக்கிறதா என்று பரிசோதிப்பதன் மூலம் இதை செய்யலாம். பாதிக்கப்பட்ட நிற பார்வைத்திறன், குறைந்திருக்கிற எதிரிடை (கான்ட்ராஸ்ட்) அல்லது நிற உணர்திறன் ஆகியவை இருக்கும்போது விழித்திரை சிறப்பு நிபுணரை நோயாளிகள் கலந்தாலோசிக்க வேண்டும்.

குறிப்பாக, நீரிழிவு (சர்க்கரை நோய்) இருக்கும் அனைத்து நபர்களும் அவர்களது இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பது மிகவும் முக்கியம். விழித்திரையில் ஏற்படுகிற ஆரம்ப நிலை மாற்றங்களை கண்டறிவதற்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் விழித்திரை பரிசோதனை செய்துகொள்வது அத்தியாவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: