நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி (வயது 10), மகேந்திரன் (வயது 7), சந்தோஷ் (வயது 5) ஆகிய மூன்று சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.  

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் (வயது 16) அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற துயரச் செய்தினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிறார்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: