'விரக்தியின் உச்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்': முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

சென்னை: விரக்தியின் உச்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ம் தேதியும், 19-ம்  தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்று மதியம் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு என்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், நிதானம் இழந்து, விரக்தியின் உச்சத்தில் கட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். பிக்பாக்கெட் என்று ஓபிஎஸ் பேசுவது அரசியல் நாகரீகமா? கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித்துறையை பறித்துக்கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று சொன்னரும் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று அவர் பெட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: