சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு 75 மதிப்பெண்ணிற்கு நடத்த மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு 60 மதிப்பெண்களுக்கும், உள்மதிப்பீடு தேர்வு 40 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. தன்னாட்சி கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டிற்கு 50:50, 60:40 என்று வெவ்வேறு வெயிட்டேஜ் உள்ளன. அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒரே மதிப்பெண் முறையை கொண்டு வரும் வகையில் செமஸ்டர் தேர்வு 75 மதிப்பெண்ணிற்கும் உள்மதிப்பீடு 25 மதிப்பெண்ணிற்கும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.