தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்படுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவை நாளை (20ம் தேதி) காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தமிழக அரசு, தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். இது குறித்து கடந்த 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், 21ம் தேதி (செவ்வாய்) 2023-2024ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். மேலும், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர் தமிழக அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி திருப்பி அனுப்பினார்.

இதற்கு ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அதன்படி, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அநேகமாக இந்த கூட்டம் 4 அல்லது 5 நாட்கள் நடத்த வாய்ப்புள்ளது. இதில் ஏதாவது ஒரு நாள் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2வது முறையாக சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பும்போது அவரால் நிராகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும் சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். எதிர்க்கட்சி தரப்பிலும் பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.

Related Stories: