தமிழ்நாடு ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 6500 ரேஷன் கடை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள வ.உ.சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாயவிலைக் கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: நியாய விலை கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்குவதற்கும், பொதுமக்கள் காத்திருக்காமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி மினி சூப்பர் மார்க்கெட் மூலம் தேவையான அனைத்து பொருட்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கான 6500 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மதிப்பீடு பணி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: