டெல்லி : இங்கிலாந்தில் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. அதானி, மோடி இடையேயான நட்பு குறித்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்த நிலையில், இங்கிலாந்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக கட்சி தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்திலும் உரையாற்றினார். அப்போது இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்றும் இந்திய சுய அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.