தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் போர்டு, பேனர் கட்-அவுட், வைக்கக்கூடாது: திமுகவினருக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக்தில், தற்போது ஒரு சிலர், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பதாக தலைமை கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும்; பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும்- மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலோடு அறிவிக்கிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கடைபிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும்.

Related Stories: