சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்யும் பணி தொடக்கம்!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவீத பணிகள் நடைபெறவிருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோ இயலாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 20 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. ராட்சத கிரேன் மூலம் பீடத்தோடு தூக்கி அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் இடமாற்றம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: