பெங்களூரு: ரயிலில் வந்த பெண் பயணியிடம் மது போதையில் அடாவடியாக நடந்து கொண்ட டிக்கெட் பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்து தென்மேற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூரு மாநகரில் உள்ள கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் நேற்று பயணச்சீட்டு பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்த டிக்கெட் பரிசோதகர் சந்தோஷ், விரைவு ரயிலில் வந்த பெண் பயணியிடம் பயணச்சீட்டு கேட்டு அந்த பெண்ணை தோள் மீது கைவைத்து தள்ளியுள்ளார். இதை கண்ட சக பயணிகள் பரிசோதனை செய்த சந்தோஷ் மது போதையில் இருப்பதை கண்டு அவரை எச்சரித்தனர். இதனால் பயந்து போன சந்தோஷ், சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டார். இந்நிலையில் சக பெண் பயணி சந்தோஷ் நடந்து கொண்ட விதத்தை படம் பிடித்து குடிகார டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை தேவை என டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த டிவிட்டர் பதிவு வைரலான நிலையில் தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு மண்டல ரயில்வே அதிகாரிகள் சந்தோஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
