சென்னை: சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சென்னையிலுள்ள திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன், திருநங்கைகள் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், சுயதொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில், அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சென்னை காவல் துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று மாலை காவல் ஆணையர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் சென்னை கூடுதல் ஆணையர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தோழி, சினேகிதி, சகோதரன், நிறங்கள் போன்ற திருநங்கைகள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் திருநங்கைகள் என சுமார் 65 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.