சென்னை: மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில், அரசு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வேலூரில் உள்ள பெருமுகை ஊராட்சி அரும்பருத்தி பகுதியில் பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக கூறி வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஒரு மீட்டர் ஆழத்தை விட அதிகமாக மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.