செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து ஸ்வீட் கடை மேலாளர் பலி: ஆவடி போலீஸார் விசாரணை

ஆவடி: செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து ஸ்வீட் கடை மேலாளர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ஆவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சார்லஸ் (37). இவர் ஸ்வீட் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரோஸ் மேரி என்பவருடன் திருமணமாகி 7 வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. ரோஸ்மேரி அதே பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ரோஸ்மேரி வழக்கம் போல் நேற்றுமுன் தினம் காலை 9 மணியளவில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் சார்லஸ் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சார்லஸ் செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின்கசிவால், சார்லஸ் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். கணவர் இறந்துகிடந்ததைப் பார்த்து ரோஸ்மேரி கதறி அழுதார். இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆவடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: