சென்னை: தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு, நேற்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் நாளைக்கு தேர்வு எழுத செல்லும்போது, உங்கள் அம்மா, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கி புறப்படுங்கள். புறப்படும் போது, ஒரு பேனாவுக்கு பதில் 2 பேனா, 1 பென்சிலுக்கு பதில் 2 பென்சில் எடுத்து செல்லுங்கள். தேர்வுக்கு செல்லும் போது, மோட்டார் பைக் மற்றும் கார், பஸ்சில் செல்லும்போது அவசர அவசரமாக படிக்காதீர்கள். கடைசி ஒரு மணி நேரத்தில் படிக்கும் போது, நமக்கு பயம் அதிகமாகும். கேள்விகளை நன்றாக படித்து பார்த்து பதில் எழுதுங்கள். கடினமான கேள்விகளை விட்டுவிடுங்கள். அதன் பிறகு தெரியாத கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் எழுதுங்கள். அதிலும், ஒரு கேள்விஅதிக கடினமாக இருக்கிறது என்றால், அதை எழுதாதீர்கள்; அதை விட்டுவிட்டு மற்ற கேள்விகளுக்கு செல்லுங்கள். எல்லா கேள்விகளையும் முடித்த பிறகு உங்களுக்கு நேரம் இருக்கிறது. இப்போது இரண்டரை மணி நேரம் தான் ஆகியுள்ளது என்றால், உடனே அறையை விட்டு வெளியே வராதீர்கள். அந்த அரை மணி நேரத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்து இருக்கிறோமா. அவை, சரியா அல்லது கூடுதலாக ஏதாவது சேர்க்க வேண்டுமா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.