தண்டையார்பேட்டை: தங்கசாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டு வரும் பசுமை பூங்கா பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலை மேம்பாலம் அருகே, ரூ.4.5 கோடி செலவில் மியாவாக்கி காடுகளுடன் பசுமை பூங்கா அமைக்கும் பணியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த மாநகராட்சி பூங்காவில், 1,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கொண்ட மியாவாக்கி காடு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேம்பு, புங்கை, நீர்மருது, மூங்கில், பாதாம், இலுப்பை, மாமரம், அரசமரம் உள்ளிட்ட நாட்டு மரங்களும், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகை மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. 1 கி.மீ., தூரத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில், 13 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல், தியான மண்டபம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், நடைபயிற்சி உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பேவர் பிளாக் நடைபாதை, பூங்கா முழுவதும் எல்.இ.டி. விளக்குகள், இருக்கைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை இங்கு செய்யப்பட்டுள்ளன.