மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்த ராஜேஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

துரோகத்தின் அடையாளமே என எடப்பாடியுடன் பயணம் செய்தபடி கோஷமிட்ட பயணியை அதிமுகவினர்  சரமாரியாக தாக்கியது மதுரை விமான நிலையத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். அவர் விமானத்தில் இருந்து இறங்கி ஓடுதளத்தில் உள்ள பேருந்தில் ஏறி நுழைவாயிலை நோக்கி பயணித்தார்.

எல்லோரும் பார்த்துக்குங்க எதிர்க்கட்சி தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். எடப்பாடியார் என்றார். உடனே எடப்பாடி பழனிசாமி கையசைக்கிறார் தொடர்ந்து, ‘‘துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகத்தை செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்தமிழக மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என கூறிக்கொண்டு இருக்கும்போதே, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரி வீடியோ பதிவிடுவதை தடுத்ததோடு, செல்போனையும் தட்டி விட்டுள்ளார்.

பஸ்சை விட்டு இறங்கிய அந்த நபரை, எடப்பாடியை வரவேற்க கூடியிருந்த அதிமுகவினர் சரமாரியாக அடித்து, உதைத்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அவர், சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எம்.வையாபுரிபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் (42) என தெரிய வந்தது. எடப்பாடியுடன் பேருந்தில் ஏறி, செல்போனில் வீடியோ எடுத்து, ‘‘துரோகியுடன் பயணம் செய்கிறோம்’’ என்ற தலைப்பிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தொடர் விசாரணையில் ராஜேஸ்வரன் அமமுக நிர்வாகி என்பது தெரிந்தது. அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் நேற்று மாலை 5.15 மணியளவில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்த ராஜேஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: