புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது. டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில், மதுபான உரிமம் தர லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பல்வேறு சோதனைகளைத் தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. புதிய மதுபான கொள்கையின் மூலம் ஆதாயம் அடைவதற்காக ‘சவுத் குரூப்’ எனப்படும் தென் இந்தியாவைச் சேர்ந்த சிலர் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வரை லஞ்சம் தந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமசந்திரன் பிள்ளையை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இவர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி எம்எல்சியுமான கவிதாவின் பினாமியாக இருப்பவர் என கூறப்படுகிறது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.