சென்னை போலீசாரின் சிற்பி திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் விதை பந்துகள் தயாரித்து அரசுப்பள்ளி மாணவர்கள் உலக சாதனை

சென்னை: சென்னை போலீசார் தொடங்கியுள்ள சிற்பி திட்டத்தில் கீழ் சுமார் 5 லட்சம் விதை பந்துகளை தயாரித்து அரசு பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை ராணி மேரி கல்லூரியில் சென்னை பெருநகர காவல் துறை சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ‘இயற்கையை  பேணுவோம்’ என்ற தலைப்பின் கீழ் 5 லட்சம் விதை பந்துகளை தயாரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் தயாரித்த விதை பந்துகளை வனத்துறையிடம் வழங்கினர். தொடர்ந்து 5 ஆயிரம் மரகன்றுகளை நட்டும் உலக சாதனை படைத்தனர்.

நிகழ்ச்சியின் போது அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ‘‘வெப்பநிலை நம்மை பாதிக்காமல் மரங்கள் நமக்கு உதவுகிறது. இயற்கைக்கு எதிரான பேராபத்தை நாம் சந்தித்து வருகிறோம்.  அதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பை தான். பிளாஸ்டிக் குப்பை மக்குவதற்கு ஆயிரம் ஆண்டு காலம் எடுக்கிறது. இது விலங்குகள், மரங்கள் ஏன் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும்’’ என்றார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, பசுமை தமிழகம் இயக்குனர் தீபக் ஸ்ரீ வஸ்தவா மற்றும் பசுமை சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சகாயம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: