திருவொற்றியூர்: ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மணிவண்ணன். இவர், நேற்று பணி நிமித்தமாக, திருவொற்றியூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே சென்ற போது, சாலையோரம் ஒரு கைப்பை கிடந்தது. உடனே வண்டியை நிறுத்தி, அந்த பையை பார்த்தபோது, அதில் 2 செல்போன்கள் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவை இருந்தது. இந்த கைப்பையை எடுத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிவண்ணன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் ஒப்படைத்து, உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.