தாம்பரம்: தாம்பரம் மேம்பாலம் அருகில் உள்ள சண்முகம் சாலையானது மிகவும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையின் அருகில் பேருந்து நிலையம், மார்க்கெட், சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் மேம்பாலத்தின் இறங்கும் பகுதி அமைந்துள்ளது. இந்த சண்முகம் சாலையை தாம்பரம் மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த சாலை கக்கன் சாலையில் பிரிந்து ஜிஎஸ்டி சாலையில் இணைகிறது. சண்முகம் சாலை சந்திப்பு ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் மிக முக்கியமான சந்திப்பாகும். மேலும் முக்கியமான வணிக சந்தையை இணைக்கும் சாலையாகவும் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ளதால் எப்போதும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய பகுதியாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் காணப்படும். சில நாட்களாக, பயணிகள் மற்றும் சந்தைப் பயனர்கள் அதிகரித்துள்ளதால், பிரதான ஜிஎஸ்டி சாலைக்கும் சண்முகம் சாலைக்கும் இடையே சரியான இணைப்பு இல்லாமல் சந்திப்பு மிகவும் நெரிசலாக உள்ளது. தற்போது, சண்முகம் சாலை ஜிஎஸ்டி சாலையுடன் இணையும் பகுதியில், தாம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் இறங்கும் பகுதி வலது பக்கம் 0.6 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இணைக்கும் பகுதியிலிருந்து 30 மீட்டர் தொலைவில் சர்வீஸ் சாலை (வளைவுப் பகுதி) முடிவடைகிறது. இதனால், பாதசாரிகள் சுரங்கப்பாதை நுழைவு மற்றும் வெளியேற தடையாக உள்ளது. மேலும், ஜிஎஸ்டி சாலைக்கு நேரடி இணைப்பு இல்லாததால் பெரியார் சாலை வழியாக சுமார் 100 மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி சாலையையும், சண்முகம் சாலையையும் இணைக்கவும், பாதசாரிகள் மற்றும் சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதசாரி சுரங்கப்பாதையை விரிவுபடுத்தவும், சந்திப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.