சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமாகாவை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டம் தொடரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதன் முக்கிய காரணம் ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன. குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்களின் வாழ்வு ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம். மேலும், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே த.மா.கா சார்பில் வலியுறுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தினேன். தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு வருகிறோம்.