புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு பாஜக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைவதால் அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம், அந்த சமுத்திரம் மீது கல்லெறிய கூடாது. அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் தானாக வந்து பிற கட்சியினர் சேர்கின்றனர். யாரையும் நாங்கள் இழுக்கவில்லை. அதிமுகவில் நிர்வாகிகள் இணைவதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அணுகக்கூடாது. அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் பாஜகவால் தாங்க முடியாது. ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது. ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை.அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.