பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும்: ஒன்றிய அரசு நடவடிக்கைக்கு மாநில அரசு உதவ ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  குடும்ப சொத்தில் தங்களுக்கும் சம பங்கு வழங்கக் கோரி, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவியும், மகளும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்து வாரிசுரிமை சட்டப்படி, ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு பெற உரிமையுள்ளதாக கூறி இரு பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க உத்தரவிட்டது  இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படவில்லை. இந்த சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறு என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் பங்கு மறுக்கும் வகையில் எந்த மரபும், நடைமுறையும் நிரூபிக்கப்படவில்லை.

இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என்று சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.  பழங்குடியின பெண்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடைக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சம பங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியது. பழங்குடியின பெண்கள் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் வகையில் ஒன்றிய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடச் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: