பெரியமேட்டில் டாஸ்மாக் திறக்க உயர் நீதிமன்றம் தடை

சென்னை: சென்னை பெரியமேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைச் செயலக ஊழியரான மனோகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெரிய மேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலை பகுதியில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரி, மத வழிபாடு தளங்களும் உள்ளன. இந்நிலையில் நேவல் மருத்துவமனை சாலையில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த கடை தொடங்கப்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதுதொடர்பாக கடந்த ஆண்டு டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, புதிய டாஸ்மாக் கடையை திறக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: