துரைப்பாக்கம்: பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரப்படும் என்று அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ உறுதி அளித்தார். சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை குடிசை வாழ் மக்கள் நல சங்கம் சார்பில் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், ஓவிய போட்டி, பேச்சுப் போட்டி, கோலப் போட்டி, கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், 14வது மண்டலக் குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், துரைப்பாக்கம் காவல்துறை உதவி கமிஷனர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். மனுவை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், விரைவில் இப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரப்படும் என வாக்குறுதி அளித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த படிப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன.