3 மகள்களை காவல் பணியில் சேர்த்திட உழைத்த தந்தை வெங்கடேசன்; மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து

சென்னை: மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்திட கடினமாக உழைத்த அவர்களது தந்தை வெங்கடேசன் அவர்களை உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கீழ் ஆவதனம் கிராமத்தைச் சேர்ந்த திரு. வெங்கடேசன் அவர்கள் தனது மூன்று பெண்கள் - பிரீத்தி, வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகியோரை காவலர் பணிக்கு தேர்வாவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தார்.  தற்போது அவரது மூன்று மகள்களும் காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் உள்ளனர்.

வெங்கடேசன் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பினை பாராட்டும் விதமாக உலக மகளிர் தினமான இன்று (8.3.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்புக் கொண்டு, அவரது மூன்று மகள்களும் காவல் பணியில் சேர்வதற்கு கடினமான பொருளாதார சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், விடாமுயற்சியுடன் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தமைக்காகவும், மகள்களை துணிச்சல் மிக்கவர்களாகவும், பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாகவும்   வளர்த்தற்காக அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, வெங்கடேசன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: