கலவரத்தை தூண்ட நினைக்கும் அண்ணாமலை, சீமானை கைது செய்ய வேண்டும்: அரசுக்கு பாரத மக்கள் கழகம் கோரிக்கை

சென்னை: பாரத மக்கள் கழக தலைவர் வி.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, வெறுப்பரசியலை நடத்தும் விதமாகவும், சிறந்த நிர்வாகத்தினை சீர்குலைக்கும் எண்ணத்திலும் பாஜகவினர் சில செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின.

இவை போலி என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கையில் உண்மைக்கு புறம்பாக, தவறான தகவலை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட நினைக்கிறார். அதேபோல, தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். எனவே, அண்ணாமலை, சீமானை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாரத மக்கள் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

Related Stories: