இந்தியா முழுவதும் H3N2 காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தகவல்... தமிழ்நாட்டில் 1000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு : தமிழக மருத்துவத்துறை!!

சென்னை :இந்தியா முழுவதும் H3N2 காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் H3N2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது.

இந்த நிலையில் காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,இந்தியா முழுவதும் H3N2 காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சல் 3-4 நாட்களுக்கு தொடர்கிறது. மாநில சுகாதாரத் துறையிடம் போதிய மருந்துகள் இருப்பு உள்ளது. காய்ச்சல் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.இந்த புதிய வைரஸ் காய்ச்சலுக்கான கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம், தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் வரும் 10ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் மட்டும் 200 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். காலை 9 மணி இந்த முகாம்கள் செயல்பட தொடங்கும். கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செயல்பட்டு வருகிறோம்,என்றார்.

Related Stories: