வேலை வாங்கி தருவதாக ரூ.74 லட்சம் மோசடி பிரபல கவர்ச்சி நடிகையின் தங்கை கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: ஆன்லைன் மூலம் விளம்பர செய்து வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக 17  பேரிடம் ரூ.74 லட்சம் மோசடி செய்ததாக பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் தங்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல சினிமா கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவரது தங்கை ஷோபா (46). இவர், தனது கணவர் வசந்தனுடன் கேளம்பாக்கத்தில் வசித்து வருகிறார். ஷோபா வளசரவாக்கத்தில் வெளிநாடுகளில் வேலை வாங்தித் தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் பொறியாளர் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் பலர் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தை அணுகியுள்ளனர். அப்போது, நேர்முகத் தேர்வு நடத்திய ஷோபா  17 பேரை  தேர்வு செய்ததாக கூறி அவர்களிடம் இருந்து ரூ.74 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால் பணம் கொடுத்த யாருக்கும் பணிக்கான விசா பெற்றுத் தரவில்லை. இதுகுறித்து ஷோபாவிடம் நேரில் சென்று கேட்டபோது, முறையாக பதில் அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 17 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணையை வைத்து விசாரித்துள்ளனர். அது போலி என்று தெரியவந்தள்ளது. இதை தொடர்ந்து 17 பேரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளனர். புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஷோபா  அங்கீரிக்கப்படாத வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி 17 பேரிடம் ரூ.74 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

எனவே, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கேளம்பாக்கம் சென்று ஷோபாவை கைது செய்தனர். மேலும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அங்கு, வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்ட போலி ஆவணங்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

Related Stories: