தமிழக விமான நிலையங்களில் சரக்குகள் இறக்குமதி குறைந்தது: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களின்  சரக்ககங்களில், கடந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட சரக்குகளை விட, இந்த  ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. சென்னை விமான நிலைய சரக்ககத்தில் இந்த 2023  ஜனவரியில் 2 கோடியே 35 லட்சம் 93 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.  ஆனால், கடந்த 2022 ஜனவரி மாதத்தில் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரம் கிலோவாக  இருந்துள்ளது.

எனவே, கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது, இந்த  ஆண்டு ஜனவரியில், சென்னை விமான நிலைய சரக்ககத்தில் கையாளப்பட்ட சரக்குகளின்  அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில்  உள்ள மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உள்ள சர்வதேச  சரக்கங்களிலும் கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் சரக்குகள்  கையாளப்பட்ட அளவு குறைந்துள்ளது.

குறிப்பாக கோவை விமான நிலைய சர்வதேச  சரக்ககத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் 6.22 லட்சம் கிலோ சரக்குகள்  கையாளப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள்  மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இதேபோல், மதுரை, திருச்சியிலும் கையாளப்பட்ட  சரக்குகளின் அளவு குறைந்துள்ளது.இதுபற்றி சென்னை விமான நிலைய சர்வதேச சரக்கக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை  விமான நிலைய சரக்கத்தில் ஒவ்வொரு மாதமும், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது  சகஜம்.

அதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் எதுவும் இல்லை. மேலும் இந்த  கையாளப்பட்ட சரக்குகளில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு தான்  குறைந்துள்ளது. ஏற்றுமதி சரக்குகள் அதே நிலையில்தான் இருக்கிறது,  குறையவில்லை. இது எதை காட்டுகிறது என்றால், தற்போது நாம் சொந்தமாக  பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்கிறோம். வெளிநாடுகளில் இருந்து,  இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை. நமது நாடு சுயமாக சொந்த காலில் நிற்க  தொடங்குகிறது, என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டதால்,  வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப் பெரும்  அளவு குறைந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: