எடப்பாடி கூட்டத்தில் விதிமீறல்: 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெரு - சேணியம்மன் கோயில் தெரு சந்திப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அவரது வருகையையொட்டி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மகாராணி திரையரங்கம் முதல் தண்டையார்பேட்டை காவல்நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும் அனுமதி பெறாமல்,அதிமுக கட்சி  பதாகைகளை ஆபத்தான முறையில் வைத்திருந்தனர்.

மேலும், அனுமதியில்லாமல் எல்இடி திரைகளை வைத்து அதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி சவுக்கு சங்கர், நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் பேசிய பொய் செய்திஒளிபரப்பு செய்துள்ளனர். இது குறித்து திமுக வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பொது தொல்லை, இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் வதந்தி பேச்சு  உள்ளிட்ட 10 பிரிவுகளில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஆர்.கே. நகர் பகுதிச் செயலாளர் சீனிவாச பாலாஜி, வட்டச் செயலாளர் அன்பு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: