தமிழ்நாடு காவல் மண்டல தடகள போட்டி சென்னை மாநகர காவல்துறை அணி 47 பதக்கங்கள் பெற்று சாம்பியன்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான 62வது தடகள போட்டியில் 47 பதக்கங்கள் பெற்று சென்னை மாநகர காவல்துறை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான 62வது தடகள போட்டி 2023, திருச்சி அண்ணா மைதானத்தில் கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் சென்னை மாநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் கலந்துகொண்டன.

இந்த போட்டியில் ஓட்ட பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம்,கம்பி ஊன்றி தாண்டுதல், மாரத்தான் டெக்கத்லான் ஆகிய போட்டிகள், ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கென தனித்தனியாக நடந்தது.இந்த போட்டியில் சென்னை மாநகர காவல் அணியின் ஆண்கள் அணியினர் 7 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களும், பெண்கள் அணியினர் 14 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் மொத்தம் சென்னை காவல் தடகள அணியினர் 21 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என 47 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான கேடயம் பெற்றனர்.

பெண்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் சென்னை காவல் அணியினர் முதலிடம் பெற்றும், ஆண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் 2ம் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: