தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகிகள் 3 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெரு சேனியம்மன் கோயில் தெரு சந்திப்பில் நேற்று மாலை நடந்தது. இதில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி மகாராணி திரையரங்கம் முதல் தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிமுகவின் பதாகைகளை ஆபத்தான முறையில் அதிமுகவினர் வைத்திருந்தனர். இந்த பதாகைகள் வைப்பதற்கு சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை. மேலும், எல்இடி திரைகளை வைத்து, அதில், அதிமுகவுக்கு சம்மந்தமில்லாத சவுக்கு சங்கர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி ஏற்கனவே பேசிய உறுதிப்படுத்தப்படாத பொய் செய்திகளை ஒளிபரப்பு செய்தனர்.