சென்னை: வைரஸ் காய்ச்சல் குறித்து, பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: இந்தியாவில் எச்3என்2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்துக்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூச்சுத் திணறல், நிமோனியா போன்றவை தாக்கக் கூடும். பலருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்படக்கூடும்.