சென்னை: ஆவடி அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32), பெயின்டர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். யோகேஸ்வரன் மீது ஆவடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியாக வலம் வந்த இவர், தற்போது திருந்தி பெயின்டர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், யோகேஸ்வரன் தனது குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த 10 பேர், யோகேஸ்வரனின் வீட்டுக்குள் நுழைந்து, கட்டிலில் தூங்கி கொண்டிருந்த யோகேஸ்வரனை மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் யோகேஸ்வரனுக்கு கழுத்து, முகம், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவலறிந்த ஆவடி காவல் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யோகேஸ்வரனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
