நள்ளிரவில் வீடு புகுந்து ரவுடி கொலை கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: ஆவடி அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32), பெயின்டர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். யோகேஸ்வரன் மீது ஆவடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியாக வலம் வந்த இவர், தற்போது திருந்தி பெயின்டர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், யோகேஸ்வரன் தனது குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த 10 பேர், யோகேஸ்வரனின் வீட்டுக்குள் நுழைந்து, கட்டிலில் தூங்கி கொண்டிருந்த யோகேஸ்வரனை மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் யோகேஸ்வரனுக்கு கழுத்து, முகம், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவலறிந்த ஆவடி காவல் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யோகேஸ்வரனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2016ம் ஆண்டு யோகேஸ்வரனுக்கும், அவரது நண்பரான மீன் வியாபாரி சுறாவுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. அப்போது, மீன் வியாபாரி சுறாவை அவரது வீட்டில் வைத்தே யோகேஸ்வரன் வெட்டி கொலை செய்துள்ளார். இதற்கு பழிக்குப்பழியாக யோகேஸ்வரனை தீர்த்துக் கட்ட சுறாவின் கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், மீன் வியாபாரி சுறாவின் கூட்டாளிகள், யோகேஸ்வரனை வெட்டி கொன்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில்  கஞ்சா உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ரவுடி யோகேஸ்வரனுக்கும், பிற  கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் இருந்ததும் தெரியவந்தது. அவர்களில் யாரேனும் இவரை கொன்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: