மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் திருவிழா

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் நடந்த அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் திருவிழாவில் பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். சென்னை, மணலி புதுநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில், அய்யாவின் 191ம் ஆண்டு அவதார திருநாள் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்து, 2 குதிரைகள் பூட்டப்பட்ட, அலங்கார சாரட் வண்டியில் அகில திரட்டு ஆகமத்தை வைத்து, காலை 6 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. பாத யாத்திரையை தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், லதா நாராயணன், கோயில் நிர்வாக தலைவர் தங்கப்பழம், செயலாளர்கள் பால கிருஷ்ண கண்ணன், கிருபாகரன், சிவராஜன் வைகுண்டராஜ், பொருளாளர் ஜெயக்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக 15 கி.மீ. துாரம் கடந்து, மதியம் மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலை பாதயாத்திரை வந்தடைந்தது. பின்னர் மதியம் பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதர்மம், மாலையில் ஊஞ்சல்சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல், இரவு வைகுண்ட ஜோதி ஏற்றுதல் போன்றவை நடந்தன. ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

Related Stories: