பெருங்களத்தூரில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1.70 கோடி அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

தாம்பரம்: பெருங்களத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.70 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், 56வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.டி கிரீன்சிட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான 3,800 சதுரஅடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் சுற்றுசுவர் அமைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இந்நிலையில், நேற்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உத்தரவின்பேரில், வருவாய் துறை மற்றும் காவல் துறை உதவியுடன், சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், அரசு நிலத்தை ஆக்கிரமத்து அமைக்கப்பட்டு இருந்த சுற்றுசுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்டனர்.

இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.70 கோடி என கூறப்படுகிறது. இதுபோல, அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிகைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், அரசின் விதிமுறைகளின்படி சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், பெருங்களத்தூர் பகுதியில் ஏராளமான அரசு நிலங்கள், நீர்நிலைகள், தனியார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை கண்டறிந்து மீட்க வேண்டும். இவ்வாறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.

Related Stories: