செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைகூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனார்கோயில்: செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூட்ம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல்கொள்முதல் செய்யப்பட்டதால் விசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செம்பனார்கோயில் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 580 மூட்டை நெல் சுமார் ரூ.6.50 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

அதன்படி சுமார் 300 மூட்டை நெல் கோ-50 ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.1,910க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,850க்கும் சராசரியாக ரூ.1,875க்கும், 280 மூட்டை நெல் உமா ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.1,675க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,610க்கும் விலைபோனது. இதேபோல் விவசாயிகளின் இடத்திற்கே சென்று பரிவர்த்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கப்படுகிறது எனவும், மேலும் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடி பணமும் கிடைக்கப்படுகிறது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவதாக கூறுகின்றனர்.

Related Stories: