சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சஃபீக்,ஜெ. சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், கூடுதல் நீதிபதிகளான ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகிய ஐந்து பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அண்மையில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலானஉச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, கூடுதல் நீதிபதிகள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, அவர்கள் ஐந்து பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.