ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணிகளில் தற்போது அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகரின் எல்லைப் பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் குப்பைகளை பலரும் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என நகராட்சி தரப்பில் பலமுறை எச்சரித்தும் பலரும் இரவு நேரங்களில் குப்பைகள் கொட்டுவதை தொடர்கின்றனர். இதையடுத்து நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கையின்படி நகர் எல்லை பகுதிகளுக்குள் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் வேண்டுகோளை அடுத்து சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுபோன்ற பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது கடினம் என பல்வேறு தரப்பினும் கூறுகின்றனர். எனவே இதுபோல் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.