திருப்போரூர்: சென்னேரி கிராமத்தில், இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேருக்கு, ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியதால், அவர்களுக்கு கவுரவிப்பதற்காக நடந்த பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது, திருப்போரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. செங்கல்பட்டை அடுத்துள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த மாசிசடையன், வடிவேல், பெருமாள் ஆகியோருக்கு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர்களுக்கு சென்னேரி கிராம மக்கள் சார்பில், நேற்று காலை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஓஎம்ஆர் சாலை வழியாக சென்னேரி சென்றார்.