கொரோனா காரணமாக தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது.

மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை திரும்பப் பெற்று 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கக் கோரி ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சிபிஎஸ்இ மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டங்களில் பயின்றவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.சமீபத்தில் ரயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 குரூப் டி பணியிடங்களுக்கும், 40,889 தபால் துறை பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரன்டிஸ் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்று கூறியிருந்தார்.

 இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்கும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: