நெடுஞ்சாலைத் துறையில் மீதமுள்ள 634 பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்து வரும் பாலப் பணிகளை விரைவாக முடிப்பது தொடர்பாக, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தலைமை பொறியாளர்கள் சந்திரசேகர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பாலமுருகன், தேசிய நெடுஞ்சாலை முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சாலைப் பகுதியில் உள்ள மின் கம்பங்களை இடம் மாற்றுவது, தொலைபேசி கண்ணாடி இழை கம்பிகளை இடம் மாற்றுவது ஆகிய பணிகளை, பாலப்பணிகள் கட்டுமானம் நடைபெறும்போதே மேற்கொள்ள வேண்டும், அதனால் தேவையற்ற கால விரயத்தை குறைக்க முடியும். ரயில்வே மேம்பாலங்களுக்கான நேர்பாடு தேர்வு செய்யும்போது, மின் கம்பங்கள், கண்ணாடி இழை கம்பிகள் குறைவாக உள்ள நேர்பாட்டை தேர்வு செய்யப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் வொர்க் பிரண்ட் எனப்படும், நிலம் மற்றும் அடுத்தடுத்து தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் அனுமதிகளை தாமதமின்றி வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

வனத்துறையின் அனுமதி, நீர்வள ஆதாரத்துறை அனுமதி போன்ற பிற துறைகளின் அனுமதிகளை விரைந்து பெறுவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க இயலும். டிசைன் மிக்ஸ், ஜாப் மிக்ஸ், பைல் லோடு டெஸ்ட் போன்ற ஆய்வுப் பணிகளை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க முடியும். 2021ம் ஆண்டு நிலுவையில் உள்ள மொத்தம் 306 பாலப் பணிகளில் 156 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-22ம் ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்ட 775 எண்ணிக்கையிலான பாலப் பணிகளில் 567 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2022-23ம் ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட 276 பாலப்பணிகள் நடந்து வருகின்றன. மீதமுள்ள 634 பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். அவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: