ஆளுநர் செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு

திருவாரூர்: ஆளுநர் ரவி, தனது தரம் தாழ்ந்த பேச்சுக்களை நிறுத்தி கொள்ளாவிட்டால், அவர் செல்லும் இடமெல்லாம் தொடர் போராட்டம் நடத்தப்படும் என முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுடன் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை பாஜ கிளை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். ஜன சங்க தலைவர் எழுதிய புத்தகத்தை ஆளுநர் மாளிகையில் வெளியிட்டுள்ளதுடன் உலக மாமேதை என்று அழைக்கப்படும் காரல் மார்க்ஸ் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆளுநரின் இந்த போக்கினை கண்டிப்பதுடன், தனது தரம் தாழ்ந்த பேச்சுக்களை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் செல்லும் இடமெல்லாம் தொடர் போராட்டம் நடத்தப்படும். இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு அவரே பொறுப்பாவார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: