புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 2ல் முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மார்ச் 02 இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பகுதி 4, பகுதி 6 உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 800 மிமீ விட்டமுள்ள பிரதான குழாயுடன் 450 மிமீ விட்டமுள்ள குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 02.03.2023 அன்று இரவு 10 மணி முதல் 03.03.2023 அன்று காலை 6 மணி வரை பகுதி-4-க்குட்பட்ட பகுதிகளான முத்தமிழ் நகர், கவியரசு கண்ணதாசன் நகர், எருக்கஞ்சேரி, சர்மா நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், பி.வி.காலனி மற்றும் பகுதி-6-க்குட்பட்ட கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: